கோவைப் பூ (226-250)

 தென்றலின் விசுவாசம்

தேன்சுவை கனிகளின் உல்லாசம்-

காற்று-பணப்பாசம்.                (226)

 

இரவில் பிறந்துவிட்டேன்

வெளிச்சத்தில் வாழ்வதற்காக-

பாலில் உலாவும் 'நெய்'.          (227)

 

படுதாப் போர்வைக்குள்

முகக்கோலம் காட்டும் மாந்தர்-

கண் மூடிய 'பூனை'.                 (228)

 

ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்தவன்

வயது முதிர்ந்து படுக்கையில்-

நீர்நிறையும் குடத்தொலி.        (229)

 

தென்னை மரத்தின் நிழல்

மாடியைச் சுத்தம் செய்கின்றது-

தூசு களையவில்லை.              (230)

 

ஆழத் தோண்டினால்தான்

குடிப்பதற்கு ஊற்றுநீர் கிடைக்கும்-

உலகத்தில் 'பரம்பொருள்'.      (231)

 

தொடர்ந்து நெய்தாலும்

துணிக்குக் குறியீடு அவசியம்-

வரையறுத்த வாழ்க்கை.          (232)

 

ஆசான் இல்லாத

பள்ளிக்கூடங்கள்; அடடே...

நீரில்லாக் கிணறு.                   (233)

 

கலங்காத ஒற்றுமை

முட்டைக்குள் வெள்ளை, மஞ்சள்...

அடடே... கூழ்முட்டை?                    (234)

 

ஆசையின் தோரணங்கள்

திக்கெல்லாம் காற்றின் போக்கு-

ஓர் இடத்தில் முடிச்சு.              (235)

 

தொல்லையே தந்தாலும்

எப்பொழுதுமே விடமாட்டார்; அட...

முள்ளுள்ள ரோசா.                  (236)

 

அழவும் முடியவில்லை

அடிக்கவும் முடியவில்லை; பாவம்

கருவறையில் குழந்தை.           (237)

 

நிர்ணயிக்கப் போவதும்

நிச்சயிக்கப்படுவதும் அவர்கள்-

திருமணத்தில் அய்யர்?            (238)

 

அழித்தா விடுகின்றோம்

விரட்டி மட்டும் விடுகின்றோம்-

சோற்றின் மீது ''.                   (239)

 

கடல் மட்டும் அலையா?

நீருள்ள இடமெல்லாம்-அட....

குப்பிக்கேற்ற மூடி.                  (240)

 

அரிசி கழுவிய நீர்

தினந்தினமுஞ் சேரப் புளிக்கும்-

மாட்டுக்குத் தண்ணீர்.             (241)

 

நாடக அரங்கத்தில்

துரியோதனர்கள் நடிக்கிறார்கள்-

எரிகின்ற வீடு?                        (242)

 

அலங்காரச் சுவரில்

அமர்ந்திருக்கும் சிறு கண்ணாடி-

நடுத்தெருப் பிள்ளையார்.       (243)

 

குறுக்கத்தரித்த உரு

காட்டாற்று வெள்ளம்; அடடே...

ஐக்கூக் கவிதைகள்.                 (244)

 

நிமிர்ந்தால் தலைபடுமென

சாய்ந்திருக்கும் நாற்றுகள்-ஆம்...

மணக்கோலத்தில் 'பெண்'.      (245)

 

பூவை நாடும் பூ

பறிப்பதால் பூவிற்கு வாட்டம்-

செடியில் இருந்தாலும்.?          (246)

 

நிலக்கடலையில் எண்ணை

காய்ந்த பின்பே எடுக்கவேண்டும்-

மழலையர் திருமணம்?            (247)

 

நிழலான வாழ்க்கை

நிஜமாவதாய் உணர்வின் அலைகள்-

திரையரங்கில் 'மக்கள்'.            (248)

 

சுவரில் கண்ணாடி

சுவரைக் காட்டுவதில்லை-அட ...

உனக்குள்ளே ஒருவன்.           (249)

 

நிழலில்லாத இடம்

மழைபெய்தால் முற்றும் நனையும்-

திறந்தவெளி ஊர்தி.                 (250)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)