கோவைப் பூ (201-225)

 எங்கோ வெடித்தது வெடி

பறந்து ஓடியது காக்கை-

வாழ்க்கை - மௌன வெடி.     (201)

 

தனித்தனிக் குழுக்களாகக்

குளத்தில் சேர்ந்தது மழைநீர்; ஓ...

செம்புலப் பெயல் நீரா?          (202)

 

எங்கோ வைத்த விரல்

என்காதைத் துளைக்கும் செய்திகள்-

வளம்வரும் தொலைபேசி.      (203)

 

சமூக அமுதசுரபி

இன்னும் வற்றவில்லை. அடடே....,

நாட்டின் 'மக்கள்தொகை'.       (204)

ஊறினாலே துப்பத்

தேவையான எச்சில் வரும்-

உள்ளத்துணர்வின் பசை.        (205)

 

தனித்தனி முகவரிகள்

கட்டுக்குள் ஒன்று சேர்ந்தன-

நாடாளு மன்றம்.                     (206)

 

ஊர்ந்துபோன பெருமழை

தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில்-

அடர் வனப்பிரதேசம்.             (207)

 

தான்வாழ இணையும்

மின்சாரத்தைத் தொடமுடியா(து)-

நீரிறைக்கும் கருவி?                (208)

 

உலர்ந்து உதிர்ந்த இலை

பாழுங் கிணற்றுப் பிரதேசம்-

சிலந்தியின் விசுவாசம்.           (209)

 

நீர் நிறைந்திருந்தால் 'குளம்'

நீர் குறைந்திருந்தால் 'குட்டை',  அட...

வானம் பொய்த்தாலோ 'திடல்'.(210)

 

உலவுகின்ற நெய்யை

மத்தால் கடைந்தாக்கும் ஆயர்-

வேதங்கள் நான்கு.                   (211)

 

திக்கற்ற வீடு

திருடன், திருடவா செல்கின்றான்-

பாழடைந்த மாளிகை.             (212)

 

உதிர்கின்ற மலர்கள்

செடிக்கு உரமாய் மாறுகின்றன-

உதிர்ந்தவிடத்துப் பூ?              (213)

 

தினம் குனிந்துகுனிந்து

கேள்விக்குறியானது முதுகு-

பணிவாய் ஒலிபெருக்கி?         (214)

 

உதிர்ந்த சருகுகளை

ஆற்றங்கரையில் வீசிவிட்டேன்-

எறும்பின் நதிப்படுக்கை.         (215)

 

ஏராளமாய்க் கொடிகள்

எண்ணிக்கையில்லாக் கடசிகள்

இரா(வில்) விட்டில் பூச்சிகள்.  (216)

 

இன்றைய மருமகள்

நாளைய மாமியார்; அட...

அடுப்படி உபதேசம்.                (217)

 

தீராத ஏக்கம்

திருப்புமுனை வாசகம்; அடடே...

கண்ணில் நெருப்புத்துகள்.      (218)

 

ஈரமான துணிதான்

பிழிய, அழுக்கை வெளியேற்றும்-

பெண்ணின் அழுக்குமழை?    (219)

 

துளிர்விடுவதற்காக

எத்தனை, இலைகள் சருகுகளாய்-

சமுதாயப் புரட்சி.                     (220)

 

இருப்புப் பாதையில்

பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது-

இரயில் தண்டவாளம்.             (221)

 

மோகக் கூந்தலில்தான்

தாகம் பந்தல் போடுகின்றது

குடிகாரன் பேச்சு.                     (222)

 

இரைதேடுங் கோழி

குப்பையைச் சீரழிக்கின்றது-

முட்டைக்காய் மக்கள்.             (223)

 

தூக்குக் கயிற்றின் முடி

அவ்வப்போது தளர்த்தப்படும்-

தண்டச் சமுதாயம்.                   (224)

 

இரவில் ஆட்சிசெய்தவள்

விடிந்ததும் ஓடிவிட்டாள்; எப்படி?

ஓ... கனவு வாழ்க்கை.              (225)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (726-750)

கோவைப் பூ (226-250)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)