கோவைப் பூ (251-275)

 நினைத்ததையே நினைத்து

நினைந்துருகும் மக்கள் கூட்டம்-

மாவறைக்கும் எந்திரம்?          (251)

 

அந்தரத்தில் மனிதன்

மேலும் கீழும் ஆபத்து...

மகிழ்வான 'வாழ்க்கை'.           (252)

 

நினைவுச் சின்னங்கள்

யாருக்காக எழுகின்றன-

நெஞ்சில் ஓர் ஆலயம்?            (253)

 

நீரைத் தேக்குதற்கு

விளைநிலம் பாழானது; அடடா...

வறண்டுவிட்ட ஏரி?                (254)

 

அடங்காத இதயம்

இமைகள் மூடியும் அடங்கவில்லை...

கனவின் 'சிம்மாசனம்'.             (255)

 

நீர் தந்ததற்காகத்

தன்னையே தியாகம் செய்யும்-

தோட்டத்து 'வாழை'.               (256)

 

நூலாகும் பருத்தி

செய்யும் போதும் வீணாகும்-

பட்டறையில் மரத்தூள்.          (257)

 

என்னமாய் வளர்கின்றது

மனக்கற்பனையில் குருத்து-அட....

இலைகளில் செல்லரிப்பு.        (258)

 

நெஞ்சில் அக்கினிக்குஞ்சு

முரசு கொட்டிச் சிரிக்கின்றது-

தன்மானத் தாய்மகள்?             (259)

 

பகடைக்காய் ஆட்டம்

காயைப் பக்குவமாய் நகர்த்தினேன்-

தாயம், அதன் கையில்.            (260)

 

ஒற்றுமையாய் இருந்தது

வானத்தின் மகிழாரவாரம்-

பாவம், மண்-மணலாய்.           (261)

 

பகலின் சிதறல்கள்

பதுங்கியிருந்து வெளியாகும்-

இரவு நட்சத்திரம்.                    (262)

 

பதர்தூற்றி வெய்யிலில்

காய்ந்த நெல் கோணிக்குள்; ஆம்...

உழவனுக்காகப் பதர்.             (263)

 

வானில் பறவைகள்

ஒற்றுமையாய்ப் பறக்கின்றதே-அட

வழி-மேடா? பள்ளமா?           (264)

 

பதிபசு பாசமெல்லாம்

சைவசித்தாந்தக் கருத்துகள்-

உருண்டையாய் 'உலகம்'.       (265)

 

பலநாள் முயற்சியினால்

புல்லை வட்டமிடும் மழைநீர்-

தீராத தாகம்.                            (266)

 

குளிர்ந்தால் பனிக்கட்டி

விரிந்தால் தன்னெடை குறையும் நீர்

கன்னியர் ஆசைகள்?               (267)

 

பவவழிப் பாதைகள்

சேருமிடத்தில் முள் குத்தும்-

மதிலின்மேல் அரசியல்.          (268)

 

பாதம் கடித்தாலும்

என்றைக்கும் விடுவதில்லை; அட...

நமைச்சுமக்கும் செருப்பு.         (269)

 

தென்னைக்கும் நெற்கும்

ஏற்றத்தாழ்வு அததற்கி(ல்)லை-

மனத்தளவே வாழ்வு.               (270)

 

பார்ப்பதற்கே கண்கள்

கசங்கவும் கசக்கவும் அல்லவே; அட

அழுக்கில்லாத கை.                 (271)

 

புதியதாக வாங்கினேன்

அதற்குள்ளா, இப்படி கிழிந்தது-

முள்ளில் சிக்கிய துணி.            (272)

 

தோல் செருப்பானாலும்

ஊசியால் குத்தியே ஆகவேண்டும்

மழையும் இடிமின்னலும்.        (273)

 

புதையல் அகப்பட்டது

மகிழ்ச்சி, ஆனால் வெற்றுக்குடம்-

ஓ... காதலியின் 'மனம்'.           (274)

 

புவியீர்ப்பு விசையால்

புரளாமல் இருக்கிறது நிலம்-

மாறாத கைவிரல்.                    (275)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)