கோவைப் பூ (301-325)

 யார் கட்டியது சிறை

தென்றல் பட்டதும் விழுந்துவிட்டதே-

கடப்பாறைப் பெண்மனம்?    (301)

 

வம்சங்களின் இறகெலாம்

காற்றில் பறக்கும் மலராச்சு-

காற்றுக்கெது 'வேலி'.              (302)

 

பருக்களை வேரோடு

கிள்ளி எறிகின்றோம்; முகத்தில்....

அழியாத தழும்பு.                     (303)

 

வயிறே வற்றினாலும்

வற்றாதே மாநகர்ச் சாக்கடை-

அலங்கார 'ஊர்வலம்'.             (304)

 

வாமன அவதாரம்

பெயரைச் சொல்லவில்லை; அடடே

எறும்புக்கே 'சாதனை'.            (305)

 

வானமெப்படியாயினும்

சூரியன் வரத் தவறுவதில்லை-

குறுக்கே 'இடைத்தரகர்கள்'.    (306)

 

வாய்மையே வெல்லும்

ஆமாம்... ஆயிரத்தில் ஒரு சொல்-

பொய்ப்பாராளுமன்றம்.          (307)

 

வான்திரை ஓட்டைகள்

மோகக் கவிக்கு நட்சத்திரம்-

வறுமைத் தாவணிகள்.            (308)

 

விடுகதைக் குடிசை

மின்மினிப் பூச்சிகளாய் விளக்குகள்-

கல்லறையில் தியாகி?             (309)

 

விளக்கின் வெளிச்சத்தில்

பல உண்மைப் பிரதிநிதிகள்-

பொய்களின் 'முக்காடு'.           (310)

 

சோறு பொங்கியதால்

சோற்றுக்காச் சொந்தம் சட்டி

குழம்புக்கும் 'சட்டி'.                  (311)

 

விளக்கைப் போட்டதுமே

காணாமல் போய்விட்டது இருள்

மின்சாரக் கனவு?                     (312)

 

வெள்ளை அடித்தசுவர்

தினந்தினமும் கரும்புள்ளிகள்; ஓ...

பால்காரன் கணக்கு.                (313)

 

நிலவுக்கும் மூன்றுநாள்

எப்படியது சாத்தியமாகும்

இன்று 'அமாவாசை'.               (314)

 

வெள்ளையடித்த சுவர்

ஒருநாள் இரவு தூங்கிவிட்டேன்-

சுவர் முழுக்க விளம்பரம்.        (315)

வேறுபட்டிருந்தாலும்

தற்காப்பில் ஒன்றும் விரல்கள்-

அட... தேர்தல் கூட்டணி.        (316)

 

வெளிச்சமில்லாப் பாதை

கொலைகளுக்குக் குறைவே இல்லை-

எறும்புகளின் ஊர்வலம்.         (317)

 

புள்ளிவைத்த கோலம்

வண்ணம் மட்டும் கொடுக்கவில்லை

அடியில், 'சிவந்த மண்'.           (318)

 

விழுந்ததும் ஒட்டியமண்

எழுமுன் துடைக்கச் சென்றது கை-

ஒளியை மறைக்கும் இலை.    (319)

 

வானில் பறவைகள்

ஒற்றுமையாய்ப் பறக்கின்றன; அட...

பாதையே இல்லை.                 (320)

 

அழுக்குக் கைக்குட்டை

துவைத்து மீண்டும் பயன்பாட்டில்

பிணத்தின் புத்தாடை?            (321)

 

வாசிப்பிலே படியும்

காற்றில் பறக்கும் பனித்துளிகள்-

தேர்தலில் பதுக்கல் பணம்.     (322)

 

குத்தும்போது வலி

கூர்மையாகத் தெரிகின்றது-

உன்னத 'ஐக்கூ'க்கள்.              (323)

 

வந்ததற்கு அழுகிறாய்

நாங்களோ, வாழ்வதற்கே அழுகிறோம்-

அழுகை மட்டும் 'பொது'.        (324)

 

முகம் பார்க்கும் ஆடி

உள்ளதை உள்ளபடி காட்டும்

அகத்தின் அழகே 'முகம்'.        (325)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)