கோவைப் பூ (426-450)

 எமன் வீட்டு வாசலில்

மங்கலவிழா நடைபெறுகின்றதே-

சுடுகாட்டில் 'திருமணம்'.         (426)

 

எங்கும் வெற்றுத்தாள்

செய்திகளைச் சுமந்த பிறகு-

முகம் தேடும் கடிதம்.                (427)

 

எதுவாயினும் பிரித்துப்

பார்த்து வாங்குகின்ற போது

ஓ... பெண்களை மட்டும்?       (428)

 

குண்டு கலாச்சாரம்

குழிதோண்டி புதைக்கப்பட்டது

குழியில் 'கம்ப்யூட்டர்'.             (429)

 

எல்லாம் முடிந்துவிட்டது

நிம்மதியாய் இருக்க எண்ணினேன்-

நெஞ்சில் ஒரு நெருஞ்சி.          (430)

 

என்ன ஆச்சர்யம்

அரசியல் கட்சிகள் என்னவானது?

அடுப்பிற்குள் 'பூனை'.             (431)

 

புத்தகத்தில் ஈக்கள்

கூட்டங்கூட்டமாய் மொய்க்கின்றன

நிர்வாணச் சித்திரம்.                (432)

 

ஒதுக்கி வைத்துவிட்டுப்

பின் தேடினேன், கிடைக்கவேயில்லை-

சிப்பிக்குள் முத்து.                    (433)

 

கடலில் மட்டுமா அலை?

தண்ணீருள்ள இடமெல்லாம்; அட...

குப்பிக்கேற்ற மூடி.                  (434)

 

அங்காடி வாயில்

விற்பனைக்கு விளம்பரச் சிலைகள்

மணச்சந்தையில் 'பெண்'.        (435)

 

கதவைத்திற - மின்னல்

வெளியில் வந்தால் - இடி; அடடே...

வாழ்க்கை, இடி-மின்னல்.       (436)

 

கவலை கொள்ளவில்லை

அசோகவனத்தில் சீதை; அட...

ஏமாறும் 'இராவணன்'.            (437)

 

விளக்கேற்ற வந்தவள்

விளக்காக எரிகின்றாளே

அழுகின்றது 'எரிவாயு'.           (438)

 

கனிகளின் நல்லாக்கம்

மரத்தின் நடுவில் கரும்பாதை-

உதிரும்... பொய்ச்சோறு.        (439)

 

காலில் பட்டது நீர்

காய்வதற்குள் எத்தனை மண்துகள்-

வாழ்க்கை, காற்றின் அலை.   (440)

 

ஏழு பிள்ளைகள்

ஒரே தாயின் வயிற்றில் பிறந்தனர்

நிறமாலைக் கதிர்கள்.              (441)

 

காற்றில்தான் தீயும்

பிரகாசமாகச் சுடர்கொடுக்கும்-

உடலும் உயிரோடு.                (442)

 

குட்டையில் எருமை

படுத்துக்கொண்டு இருக்கின்றது-

பணத்துக்குள்ளே 'மனம்'.        (443)

 

ஆத்மாவின் கண்ணீர்

உடலுக்கு நிம்மதியைத் தரும்

கோடைக்கால 'மழை'.             (444)

 

கூட்டமாய்த் தேனீக்கள்

பறந்து வந்தன; ஏமாற்றம்-

சாடியில், காகிதப் பூ.               (445)

 

கேள்விக் குறியாய் நான்

கண்கள் குருடாய்ப் போனதாலே-

காட்டாற்று வெள்ளம்?            (446)

 

கட்சித் தலைவர்கள்

தொகுதியில் ஈயாய் மொய்க்கின்றனர்.

அடடே... இடைத்தேர்தல்.      (447)

 

கொத்துகொத்தாய்ப் பூக்கள்

கொடியில் அழகாய் மிளிர்கின்றதே-

ஓ... கூட்டுக்குடும்பம்?             (448)

 

சமுதாய வானில்

மின்னலா கதவைத் தட்டுகிறது?

இன்னலில் வருவதே இடி.      (449)

 

பாராளுமன்றத்தில்

அண்ணாவின் சுருக்கமான உரை

அன்னம் அருந்தும் 'பால்'.       (450)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)