கோவைப் பூ (601-625)

 வேர்க்கும் அந்திவானம்

முத்துமுத்தாய் நட்சத்திரங்கள்-

புள்ளின் நுனியில் பனி.           (601)

 

வீடுதொறும் வாசல்

வாசல்தொறும் கதவும் பூட்டும்-

ஓ... விடுதலைப் பொன்விழா?(602)

 

கனகாம்பர விதைகள்

நீர்ப்பட்டதும் வெடித்துச் சிதறும்

குடிசைக்குள் 'புரட்சி'.              (603)

 

விரல் பட்டது மட்டுமா?

மக்கியுரமாக்கப்படுகிறது?

மாணிக்க மனிதர்.                    (604)

 

வானச் சமுதாயமும்

விட்டுவிடவில்லை, மதவெறி; அட...

இன்னலில் வருவதே இடி.      (605)

 

சுவைக்கின்றதே சர்க்கரை

எவ்வளவு கரும்பு அழிந்தன

அடடே... மறுபிறவி.               (606)

 

வழியாய் மண்பாதை

சுவடாய், நடந்தவரின் பாதங்கள்-

பூக்காது, அத்தி.                        (607)

 

யார் போட்டது பூட்டு

சாவி இல்லாமலே திறந்ததே-

பருவப் பெண்ணின் 'மனம்'.    (608)

 

திரைப்பட விளம்பரங்கள்

மதில் சுவரை அலங்கரித்திருந்தன

நடிகையின் 'கணவன்'?           (609)

 

மெதுவாகத் தொட்டேன்

அப்படியும் என்ன சத்தம்-

சலசலக்கும் கீற்று.                   (610)

 

முள் இரண்டும் இணைய

ஓடினால் நலமிகு கடிகாரம்-

இரயில் தண்டவாளம்?            (611)

 

மேடேறும் போது

வழுக்கின் உதவிக்கு வரும் கை

ஆலமர விழுதுகள்.                  (612)

 

முகவரி மாற்றத்தால்

திரும்பி வந்துவிட்டது கடிதம்-

கால்கடுக்கும் செருப்பு.            (613)

 

மாடியின் விளக்கெல்லாம்

அணைந்தால்தான் குடிசைக்கு ஒளி-

யானையுண் விளாங்கனி.       (614)

 

ஆற்றின் நடுவே கல்

பிரிந்து உடனே இணைந்தது நீர்

மணமுறிவு வழக்கு?                 (615)

 

மரம் வளர்ந்தாலும்

எப்பவும் மண்ணை மறப்பதில்லை-

ஆறறிவு மனிதர்?                     (616)

 

பைசாவில் தேசியம்

பகலும் இரவும் இருபக்கம்-

அண்டத்தில் பூமி.                    (617)

 

முள்ளில் படர்ந்தது கொடி

எடுக்காதே. அப்படியே விடு

சீர்த்திருத்தப் பள்ளி?               (618)

 

பூவிழி வாசலிலே

பாவம், சோதனைத் துப்பாக்கி-

ஆம்... தீவிரவாதி.                    (619)

 

புறந்தூய்மையானவன்

சேற்றில் குளித்தாலும் ஒதுக்கான்-

எருமை தருமே 'பால்'.              (620)

 

பிணமும் கொலை செய்யும்

இது எப்படி சாத்தியமாகும்?

மீனவன், கைத்தூண்டில்.        (621)

 

புத்தகமானாலே

ஏற்றத்தாழ்வை விலக்குந் தாள்கள்-

சமுதாயக் கட்சிகள்?                (622)

 

பிரம்மா எழுதவில்லை

வாழ்வின் கால கட்டத்தை-

உணர்ச்சியின் சீரமைப்பு.        (623)

 

சட்டையில் ஊக்கு

விளிம்புகளை இணைக்கின்றதுஅட!

ஆற்றில் தொங்குபாலம்.          (624)

 

பல் மறைக்கவா உதடு

தவறிய சொல்லால் நாக்குமுதடும்-

பாதை மாறினால் முள்.           (625)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)