கோவைப் பூ (626-650)

 

பயணத்தில் பார்த்தவள்

தினந்தினமும் தொடர்கின்றாள்; ஓ...

நினைவின் அலைவோசை.     (626)

 

ஆன்மா எப்பொழுதும்

யாவருக்கும் தூங்குவதில்லை

உடலின், அணிச்சைச்செயல். (627)

 

படித்துறையில் வண்ணான்

அலசி வெளியேற்றும் அழுக்கு-

மீனுக்கு உணவு.                      (628)

 

நெருப்பு அழுகின்றது

மடைதிறக்கும் கண்ணில் கண்ணீர்-

பிணத்தருகே 'மக்கள்'.             (629)

 

உயர வீசிய கல்

எவ்வளவு தூரம் செல்லும்

ஓ... புவியீர்ப்பு விசை.             (630)

 

நீர் உண்ணும் பாசி

நீரோடு மட்டும் வாழும்-

கணவனோடு மனைவி.           (631)

 

நீரில் இறங்கிய நாய்

கரைக்கு வந்ததும் களிப்படைந்தது-

தீயில் விடப்படும் நெய்.          (632)

 

வயலோரம் வேலி

முதிர்ந்ததும் எட்டிப்பார்க்கும் கதிர்

பருவ மங்கையர்.                     (633)

 

நிறம் மாற்றச் சொல்லி

சந்தைக்கு வந்தது வெண்மலர்-

சருகாய்ச் சமுதாயம்.                (634)

 

நிலமெங்கும் நிலவு

பகலும் இரவும் பகலிலேயே-

வானில், இரவல் நிலா.            (635)

 

சிகரெட்டின் சாம்பல்

விரலால் தட்டியா உதிருகின்றது

கிளையில் முதிர்ந்த 'இலை'.    (636)

 

நாற்று போல் மக்கள்

'உம்' எத்தனை எத்தனை மொழிகள்-

பூப்பதெல்லாம் பழமா?           (637)

 

நடந்து போகின்றேன்

மேடும் பள்ளமும் தொடர்கின்றது-

நெஞ்சின் அலை ஓசை?          (638)

 

முள் குத்தும் போது

எருக்கம் சிலதுளி பால்வடிக்கும்

பிணத்தருகே 'கண்ணீர்'.          (639)

 

தேவையுள்ள வரை

அதிகமான கண்காணிப்பு-

ஓ... குலவிக் கூடு.                    (640)

 

தூய்மை இல்லாதது

எப்படியோ சகித்துக்கொள்கிறோம்-

எருமை தந்ததே 'பால்'.            (641)

 

கால்கள் போனாலும்

தலையை மட்டும் காத்துக்கொள்

முச்சக்கர வண்டி.                     (642)

 

துயரப்பெண் கண்களில்

தூசு அகற்றப்படவில்லை-

விதவை, நன்செய் நிலம்.        (643)

 

திட்டுக்களாய் வானில்

மேகங்கள்... எட்டிப்பார்க்கும்-

புவியெல்லாம் சோலை.          (644)

 

நன்றாய்த் துடைத்துத்தான்

புண்ணுக்கு மருந்திடவேண்டும்

ஓ... மனநலக் காப்பகம்?         (645)

 

தன்மான மனிதர்

எப்பவுமே முயற்சியுடையார்-

தொற்றுத் தாவரங்கள்.            (646)

 

தளும்பாத நிறைகுடம்

குடத்தில் மிகச்சிறிய வெடிப்பு-

அடிச்சறுக்கும் யானை.           (647)

 

நிலைப்படுத்தும் பார்வை

தன்வயப்படும்... விரும்பியதும் நடக்கும்

ஆத்மாவின் ஸ்பரிசம்.             (648)

 

தண்ணீர்க்குடம் உடைந்தது

ஓடுகளில் எஞ்சியது நீர்-

உண்மை சாவதில்லை.            (649)

 

செம்புலப் பெயல்நீர்போல்

கலக்கும் அன்புடை நெஞ்சங்கள்-

நல்ல மணமக்கள்.                    (550)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)