கோவைப் பூ (651-675)
வாழ்க்கையின் தத்துவம்,
கூட்டலும் பெருக்கலும் கழித்தலுமாம்
வியாபாரச் சந்தை. (651)
சுகமாகத் தூங்கினேன்
தூக்கத்தில் எறும்பு கடித்தது-
உதட்டோரம் வீக்கம். (652)
சிதறிய ஒருதுளித்தேன்
எங்கு இருந்து வந்தன இவை-
வட்டமிடும் எறும்பு. (653)
புண்ணாக்கெண்ணையாய்
நிலக்கடலையைப் பிரித்தெடுத்தேன்
ஓ... மூலக்கூறுகள். (654)
சகாராப் பாலைவனம்
இந்தியாவில் நிறைந்திருக்கின்றன-
ஏழையரின் 'நாக்கு'. (655)
கோடைக்காலத்தில்
பழுத்த இலைகள் உதிர்ந்துவிட்டன-
அடுத்து வளரும் 'துளிர்'. (656)
உயர்ந்த தென்னைமரம்
பூமியைப் பார்த்து சிரிக்கின்றது
வீட்டைப் பெருக்கும் 'கை'? (657)
கை சுத்தமானாலும்
நகத்திற்கு இடையே அழுக்கு-
எண்ணையோடு திரி. (658)
கூட்டுதலும் கழித்தலும்
பின் பெருக்குதலும் பொதுவானவை-
வாழ்வின் தத்துவங்கள். (659)
ஒரே நிறத்தில்
இரத்தம்
எண்ணங்கள் மட்டும் வேறு
சாதிச் சமுதாயம். (660)
குப்பையானாலும்
நீண்ட வரலாறு பேசும்-
மக்களாட்சி நாடு. (661)
காற்றின் திசையில் தான்
இலைகள் உதிர்ந்துதிர்ந்து போகும்-
அலைபாயும் கண்கள். (662)
உணவு உள்ளவரை
அசைபோட்டுக் கொண்டே இருக்கும்...
பாலைவன ஊர்தி. (663)
காலில் புதுச்செருப்பு
நாட்பட்ட, பாத
அடிச்சுவடுகள்-
நினைவுச் சின்னங்கள். (664)
காட்டிலும் பிரச்சனைகள்
சருகுகள் எருவாய் ஆவதற்கு-
வானம் பொய்த்துவிட்டது. (665)
ஆண்டுக்கு ஒருமுறை
குடிபெயரும் அணைக்கரை வாசிகள்
நிரந்தர மின்னல்கள். (666)
கழித்ததை உண்டாலும்
மறவாமல் நன்றி கூறும்-
பிணத்தின் மீது 'ஈ'. (667)
கயிற்றின் முனையில் கல்
அதிவேகமாகச் சுழலுகின்றது-
தனக்குள் ஒரு வட்டம். (668)
ஒதுக்கப்பட்டவர்களால்
எழும் வானுயரக் கோபுரங்கள்
தொலைதூர 'தரிசனம்'. (669)
கண்ணகிச் சிலை அருகே
கரித்துண்டின் சிதறல்கள்; அட...
கணக்கு எழுதும் கை. (670)
ஒவ்வொன்றாய்ச் சேர்ந்தது
குளியலறையில் தலைமுடிகள்-
தேங்கிவிட்டது 'தண்ணீர்'. (671)
தேக்கு நேர் ஆக
பக்கக் கிளைகளைக் களையவேண்டும்
ஊருடன் கூடி வாழ்? (672)
என்ன ஆச்சர்யம்
சாக்கடையில் நல்ல தண்ணீர்-
பன்னீர் போட்ட 'முகம்'. (673)
எழுதவே பேசும்கோல்
எழுதியதும் பேசாதிருக்குமா?
திருமணத்தில் பெற்றோர். (674)
வேகம் விவேகமல்ல
மருத்துவமனையில் உபதேசம்
குலை தள்ளிய வாழை. (675)
கருத்துகள்
கருத்துரையிடுக