கோவைப் பூ (76-100)

 ஊற்றுள்ள கிணறு

எடுக்க எடுக்கக் குறையாது

ஆற்றிலும் அளந்துபோடு.       (076)

 

நேராய்த்தான் வைத்தேன்

சாய்ந்து வளர்கின்றதே தென்னை-

நிமிராது நாய்வால்.                 (077)

 

எண்ணத்தின் சமையல்

வாழ்க்கையாய் மிளிர்கின்றது; அட...

அச்சடிக்காத நூல்.                   (078)

 

நேராய் முளைத்தது செடி

வளர்ச்சியில் எத்தனை கோணல்கள்-

மனிதச் சமுதாயம்.                   (079)

 

பயணப் படகுக்குத்

துடுப்பு துரோகம் செய்தது. அட...

கட்டைவிரல் எங்கே?              (080)

 

நுழையாத காடு

எழுபத்தீராயிரம் மரங்கள்-

உடலுக்குள் நாடி.                    (081)

 

எண்ணமாய் வளர்கின்றது

மனக்கற்பனையில் குருத்து; அட...

இலைகளில் செல்லரிப்பு.        (082)

 

நுனாவும் பூத்ததுவே

வண்டு, மதுவுண்டு களித்தது-

தனியே மகரந்தம்.                    (083)

 

எல்லா ஆறுகளும்

கடலில்தான் சங்கமம் ஆகும்

ஜாதிச் சுடுகாடு?                      (084)

 

நீரில் வீசிய கல்

நீருள் பாசியின் அரவணைப்பு-

தஞ்சம் தரும் குடிசை.               (085)

திரிந்த சுண்ணாம்பும்

நீரினால் கிண்ணம்பூ பூத்தது-

பூக்குமோ என் யாக்கை?         (086)

 

நீரிறை மின்சார

நீரிலிருந்துதான் எடுக்கிறோம்; அட...

கொட்டைக்குள் 'விதை'.          (087)

 

எல்லாமும் படித்தான்

சருகுகள் உதிர்ந்து பறந்துவிட்டன

தேர்வறையில் மாணவன்.       (088)

 

நிறைகுடம் சுமக்கும் இடை

உடைந்தது குடம், நனைத்தது ஆடை-

நீர்மேல் உதிர்ந்த மலர்?          (089)

 

என் செல்லப்பூனை

தூங்கட்டும் என்றிருந்தேனே...

சமாதியானதே 'அடுப்பு'.         (090)

 

நிறைகுடம் தளும்பாது

உண்மை; பயணத்தில் கூடவா?

அலைபாய்கின்ற 'மனம்'.        (091)

 

நிலவினில் குளிக்கவாசை

நீருக்குள் கண்டேன்; இறங்கினேன்-

தலைக்குமேலே நிலவு.            (092)

 

பிரச்சாரமோயவில்லை

இலைகளின் நுனியில் முரண்பாடு-

போரின் பின் அமைதி.            (093)

நிலவின் வரவிற்குத்

தூக்கத்தை விரட்டினேன்; அடடே...

இன்று, அமாவாசை.               (094)

 

என் மனப்பாடங்களை

சரிபார்த்துக்கொண்டிருக்கிறது

புத்தக அட்டைப்படம்.             (095)

 

நான்கு திசை வேதம்

சந்திக்கும் இடத்தில் பரம்பொருள்-

அலையின் நடுவே கல்.           (096)

 

ஒதுக்கப்பட்டவைகள்

குளித்து மீண்டும் அர்ச்சனைக்கு

வண்டுண்ட மலர்கள்.              (097)

 

நான்கும் இணைந்தாலும்

தனியாய்த் தனித்திருக்கும் பெருவிரல்-

தேரில் அச்சாணி.                     (098)

 

களையாத மேகம்

காடும் நாடும் கடலாயின-

அடடே.... மோக மண்.            (099)

 

நடப்பவை எல்லாம்

உண்மையென்றே நம்புகின்றதே-

பேயாய்த்திரியும் 'மனம்'.         (100)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)